நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீர்மானம் மிக்கதோர் தீர்ப்பானது பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர் குழாமினால் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் திடீரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.
இச் சம்பவத்தின் காரணமாக நாட்டில் யார் பிரதமர்? என்ற குழப்ப நிலை நிலவி வந்த நிலையில் ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றை கலைத்து பொதுத்தேர்தலுக்கு அழைப்பு வர்த்தமானியில் கையெழுத்திட்டார்.
ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி 12 மனுக்களும் இவ் விடயம் தொடர்பாக 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானதே என கூறி 5 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
;குறித்த மனு விசாரணையானது உச்ச நீதிமன்றில் பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி வரை குறித்த இடைக்கால தடையுத்தரவானது விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.