சனி, 28 அக்டோபர், 2017

கொடிகாமத்தில் நிர்மாணிக்கவுள்ள புதிய தொழிற் பயிற்சி கல்லூரி


                                
யாழ் மாவட்டத்தில்  கொடிகாமம் தென்மராட்சி பிரதேசத்தில், புதிய தொழிற் பயிற்சி கல்லூரியொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யாழ். மாவட்டத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு முறையான தொழில் பயிற்சிகளை வழங்கும் பொருட்டு, தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி வழங்கும் திணைக்களத்தின் கீழ், அம்மாவட்டத்தில் இயங்கக்கூடிய, ஒரேயொரு நிறுவனமாக, யாழ்ப்பாண தொழில் கல்லூரி காணப்படுகின்றது.

இதில் கல்வி பயிலும் பொருட்டு வருடாந்தம் சுமார் 8,000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுகின்ற போதிலும், யாழ். தொழில்நுட்ப கல்லூரியில் 1,500 பேருக்கு மாத்திரமே தொழில்பயிற்சிகளை பெறும் வசதிகள் காணப்படுகின்றன.

இந்நிலைமையினை கவனத்திற் கொண்டு, யாழ் மாவட்டத்தில்  கொடிகாமம்       தென்மராட்சி பிரதேசத்தில், புதிய தொழிற் பயிற்சி கல்லூரியொன்றை நிர்மாணிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டதோடு, தேசிய தொழில் தகைமை (NVQ) 3, 4 மட்டத்திலான தொழில் பயிற்சிகள் பலவற்றை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ரூபா 560 மில்லியன் உத்தேச செலவில் அடுத்த இரு வருடத்துக்குள்  அக்கல்லூரியை நிர்மாணிப்பதற்கு, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.