சனி, 2 ஜனவரி, 2016

ஆட்டைத் தொலைத்த
இடையனைப் போல
தேடிக் கொண்டிருக்கிறேன்
கவிதை வரிகளை,
அது
யாராலோ
களவாடப்பட்டிருக்கலாம்.
வேண்டுமென்றே
வெளியேறிச் சென்றிருக்கலாம்.

தேடுதல்

முள் செடிகளிடையே
முடங்கியிருக்கலாம்.
பள்ளத்தில் விழுந்து
காயமாகியிருக்கலாம்.
அல்லது
வெள்ளத்தில் விழுந்து
மாயமாகியிருக்கலாம்.
எனினும்
தேடல் தொடர்கிறது.
கட்டப்படாத
வார்த்தைக்குக்
கட்டுப்பட மறுக்காத ஆடுகள் எனது.
தொலைந்த ஆட்டின்
வரவுக்காய்
மலையடிவாரத்திலேயே
காத்திருக்கின்றன
மிச்சம் தொன்னூற்று ஒன்பது ஆடுகளும்.
கவிதைப் பயணம்

ஏதோ ஓர்
தூரத்து இலக்கை
இலட்சியமாய்க் கொண்டு
என்னுடைய
கவிதைகள்
ஓடத்துவங்குகின்றன.
பல வேளைகளில்
மரத்துப் போய்க்கிடக்கும்
கால்களை
நான் தான்
வலுக்கட்டாயமாய்
வெளியே அனுப்புகிறேன்.
எல்லையின் வரைபடத்தை
உள்ளுக்குள்
எழுதிக் கொண்டாலும்
அது
தலை தெறிக்க ஓடுகிறது
தாறுமாறாய்ப் பாய்கிறது.
நான் தடுப்பதில்லை.
அதற்குரிய சுதந்திரத்தை
நான் கொடுப்பதில்லை,


அதுவாய்
எடுத்துக் கொள்கையில்
எதிரே நிற்பதும் இல்லை.
திசைகளையும்
பருவங்களையும்
மறந்து விட்டு
பல வேளைகளில் அது
எங்கோ சென்று
அமர்ந்து விடுகிறது.
பின்
வரைபடத்தைத்
தூர எறிந்து விட்டுத்
துயில் கொள்கிறது.
நான்
என் குறிப்பேட்டில்
இலட்சியத்தை இடம் மாற்றிவைக்கிறேன்.
கடைசியில்
போட்டுக் கொள்கிறேன்
என் பெயரை